March 29, 2024

75-வது சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. மக்கள் வீடுகள் தோறும் தேசிய கொடிகளை ஏற்றியுள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபடலாம் என்றும், எனவே மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே தண்டவாளங்கள், கோவில்களை சுற்றி உள்ள இடங்கள் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையின் போது சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேக நபர்களின் முகவரிகளை வாங்கி அவர்கள் பற்றிய முழு தகவல்களையும் போலீசார் திரட்டி விசாரித்து வருகிறார்கள்.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு பணிகளை வருகிற 16-ந்தேதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும், ராஜாஜி சாலையை போலீசார் கடந்த 6-ந்தேதி முதல் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர வாகனச் சோதனையும் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகப்படும் படியாக தங்கியிருக்கும் நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் உள்ளிட்ட திரவ பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பல கட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு கருதி உள்நாட்டு விமான பயணிகள் 2 மணி நேரத்துக்கு முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவும் வரும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல விமான நிலையத்தில் சரக்கு பார்சல் சேவை பகுதி, எரி பொருள் நிரப்பும் பகுதி ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று முதல் மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவதையொட்டி அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் அங்கு போலீஸ் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரவு பகலாக வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரம் முழுவதுமே போலீசார் சாலைகளில் நின்றபடி கண்காணித்து வருகிறார்கள். லாட்ஜூகள், தங்கும் விடுதிகளிலும் போலீஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக ஊடகங்களால் வன்முறைகள், மோதல்கள், குற்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறுகிறது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளால் சில நேரங்களில் கடும் விளைவுகள் ஏற்படுகின்றன. இது போலீசுக்கு சவாலாகவே மாறியுள்ளது. இதை தடுப்பதற்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சுதந்திர தினத்தையொட்டி, வன்முறையை தூண்டும் வகையிலும், மதம் மற்றும் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையிலும் பதியப்படும் கருத்துகளை தடுக்கும் வகையில் சைபர் குற்றப்பிரிவினரும், உளவுத்துறையினரும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.