April 25, 2024

வெடிகுண்டுகளை தயாரிக்க ஆன்லைனில் 2 ஆண்டுகளாக வெடிபொருட்கள் வாங்கிய முபின்

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கார் வெடிப்பில் சிக்கி பலியான ஜமேசா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றினார். இந்த வெடிபொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின் திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த வெடிபொருட்களை முபின் யார்-யாரிடமிருந்து எப்படி வாங்கினார் என்பது பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக முபின் வெடிபொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களை பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் ஆகியவற்றை முபின் வாங்கி இருக்கிறார். இந்த பொருட்களை பயன்படுத்தி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க முபின் திட்டமிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பிளிப்காட், அமேசான் போன்ற பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் வழியாகவும் இந்த பொருட்களை முபின் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு முகவரிகளில் இந்த வெடிபொருட்களை முபின் வாங்கி இருப்பதும் உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் மேலும் பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். எந்தெந்த முகவரிகளில் வெடிபொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்களை சேகரித்துள்ள போலீசார் அந்த முகவரிகளில் வசித்து வருபவர்களுக்கும் கார் வெடிப்பில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். வெடிபொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் வழியாக முபின் பணம் செலுத்தி இருக்கும் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். முபினும் அவரது உறவினர்களான அசார், அப்துல் ஆகியோர் சேர்ந்து வெடிகுண்டுகளை தயாரிக்கும் முதல் கட்ட பயிற்சியில் ஈடுபட்டதும் வந்துள்ளது. இதற்காக இவர்கள் 3 பேரும் வெடிகுண்டுகளை தயாரிப்பது தொடர்பான ‘யூடியூப்’களை பார்த்து பயிற்சி பெற்றிருக்கும் திடுக்கிடும் தகவல்களும் தெரிய வந்துள்ளன. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுபோன்று அதிர்ச்சியளிக்கும் வகையிலான பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளதால் போலீசார் விசாரணையின் வேகத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.