April 25, 2024

பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுத்த விவகாரத்தில் இதுவரை 2பேர் கைது செய்யப்பட்டு, 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.