April 26, 2024

மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி விருப்பம் தெரிவித்ததால் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்- இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதன் முதலில் மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். மாணிக்கம்பாளையம் பகுதியில் முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொதுமக்கள் மத்தியில் பேசினார். எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா 1½ ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்காக உழைத்திருக்கிறார். திருமகன் ஈ.வெ.ரா மறைந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் துக்கத்தில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் ஊக்கமும் கொடுத்தார்.

நான் போட்டியிட முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விருப்பம் தெரிவித்ததால் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். ஈரோடு நகர் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டும். தற்போது அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். ஈரோட்டில் கடந்த ஒரு வாரங்களாக கூட்டணி கட்சியினர் முத்துசாமி தலைமையில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கிறேன். முதல் முதலாக முத்துசாமியுடன் உங்களை சந்திப்பது இங்கு தான் என்றும். எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நீங்கள் நம்புகின்ற விஷயம் என்பதால் சொல்கிறேன் “பிள்ளையார் சுழியை இங்குதான் போட்டிருக்கிறேன்.

மேலும் என்னை உங்களுக்காக உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும். நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா முதலில் நாம் தமிழர் கட்சியில் இணைவதாக இருந்ததாக சீமான் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சீமான் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்றும், அவர் மீது பாசம் உள்ளது. ஆனால் அடிக்கடி சொன்னதையே மாற்றி மாற்றி சொல்லக்கூடியவர். சீமான் எனது பாசத்திற்கு உரியவர் என்றார். மேலும் என்னை இகழ்ந்தாலும், எனது மகனை பற்றி சொன்னாலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அன்பின் மிகுதியால் சொல்கிறார் என எடுத்துக்கொள்வேன் என்றார்.