April 26, 2024

பொதுமக்கள் விரும்பினால் பொறுப்பேற்க தயார்- முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு


கொழும்பு:

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாடு மீள முடியாமல் தவித்து வருகிறது. இதனால் விலைவாசிகள் அனைத்தும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் வாழ வழி தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர். அத்தியா வசிய பொருட்கள் கிடைக்காததால் அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கை அதிபர் கோத்த பயராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என கோரி அதிபர் மாளிகை முன்பு இரவு,பகல் பாராமல் இடைவிடாது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று இரவு அவர்கள் அதிபர் மாளிகை மீது எதிர்ப்பு வாசகம் அடங்கிய லேசர் ஒளியை பரவவிட்டனர். மேலும் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது..

இந்த சூழ்நிலையில் இலங்கையில் பெட்ரோல் ,டீசல் விலை மீண்டும் உயர்ந்தது பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஒரே நாளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ35 உயர்ந்து ரூ.362 ஆகவும். டீசல் லிட்டர் ரூ.75 உயர்ந்து ரூ.327 ஆகவும் அதிகரித்து உள்ளது.

நேற்று இரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.ராஜபக்சே குடும்பத்தை எதிர்த்து நடந்து வரும்போராட்டம் தீவிரமாகி உள்ளதால் அதனை ஒடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.கொழும்பு கோர்ட்டில் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்ககோரி வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதிபர் பதவியில் இருந்து விலக போவது இல்லை என மீண்டும் கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார், இன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பிரதமராக மகிந்த ராஜபக்சே தொடர்ந்து நீடிப்பார் என்றும் புதுமுகங்கள் பலர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள். என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பொதுக்கள் விரும்பினால் காபந்து அரசின் தலைவராக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் திறமை தன்னிடம் இருப்பதாக முன்னாள் பிரதமர்ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறும் போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அனைவரும் பதவி விலக வேண்டும்.பொதுமக்கள் விரும்பும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு காபந்து அரசுக்கு தலைமை தாங்க தயார். ஒன்றரை ஆண்டுகளுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்து உள்ளார்.