April 27, 2024

தமிழகமெங்கும் 3 நாட்களுக்கு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்! திமுக அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் மார்ச் 2, 3, மற்றும் 4ஆம் தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக ‘தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்ட த்தில், “மார்ச் 1-ஆம் தேதியன்று நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத் தலைவர் அவர்கள் 71-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நம் தலைவர், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார், தந்தை பெரியாரின் சமூகநீதியையும் பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார். கழகத் தலைவர் அவர்கள் அத்தகைய பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது’ என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, “எல்லோருக்கும் எல்லாம்” “திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!” நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துரைமுருகன், ஜெகத்ரட்சகன், இ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா எவ வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவர் எழிலன் நாகநாதன், பரந்தாமன், வாகை சந்திரசேகர், திண்டுக்கல் ஐ. லியோனி , நாஞ்சில் சம்பத், இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட இன்னும் பலர் இந்தப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சொறொபொழிவு ஆற்ற உள்ளார்கள்.