April 26, 2024

நோய் தொற்றில் இருந்து மீண்ட பிறகு ரத்த நாளங்களில் ரத்தத்தை உறைய வைக்கும் கொரோனா – அதிர்ச்சி தகவல்

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனா தாக்கியவர்களுக்கு ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சினைகளை கண்காணிப்பதற்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு தப்பி பிழைத்தாலும் அதன் பாதிப்பு உடலில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று மீண்டவர்களில் பலருக்கு ரத்த நாளங்களில் பிரச்சினை ஏற்படுவது முதல் அலையிலேயே தெரிய வந்தது. ஆனால் 2-வது அலையில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சுமார் 2500 பேருக்கு உடலில் பரிசோதனை செய்யப்பட்டதில் 182 பேருக்கு ரத்த நாளங்களில் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக ரத்த நாளங்களில் பிரச்சினை இருப்பது முதல் அலையின் போது ஒரு ஆண்டில் 90 பேருக்கு இருந்ததை கண்டுபிடித்ததாகவும் ஆனால் 2-வது அலையில் கடந்த சில மாதங்களிலேயே 92 பேருக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலின் அனைத்து பாகங்களுக்கும் தேவையான ஆக்சிஜன் இதயத்தில் இருந்து ஆர்டெரி குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த குழாய்களில் ரத்தம் உறைதல் பிரச்சினை பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

உடலில் எங்காவது வீக்கம், கால், கை களில் தாங்க முடியாத வலி இருந்தால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். இந்த அறிகுறிகளை பலர் சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் இறுதியில் சிக்கலில் கொண்டு விட்டு விடுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் குணமாக்கி விட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனா தாக்கியவர்களுக்கு ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சினைகளை கண்காணிப்பதற்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரத்த நாளங்களில் உருவாகும் ரத்தம் உறைதல் பிரச்சினை உயிருக்கே ஆபத்தை விளைவிக்க வாய்ப்பு உண்டு. எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தெரிய வந்தால் உடனே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.