April 26, 2024

கூட்டணி என்றாலே போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கும் – கேஎஸ் அழகிரி

பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டியின் செங்கல்பட்டு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆலோசனைகளை கூறி இந்த கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

கூட்டணி என்றாலே போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும், ஆனால் களத்தில் இறங்கி பணியாற்றத் தொடங்கி விட்டால் அந்த வருத்தம் சரியாகிவிடும்.

தி.மு.க. அரசு ஆரம்பத்திலிருந்தே நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு வி‌ஷயங்களில் தமிழக அரசு நேர்மையாக செயல்பட்டு வருகிறது.


இதனால் பொதுமக்களிடையே இந்த கூட்டணிக்கு நல்ல ஆதரவு உள்ளது.

இந்த நான்கு மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, வெளிப்படைத் தன்மை உள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசுடன் மாநில அரசு இருக்கவேண்டிய உறவுகளையும் பேணிக்காக்கின்றனர்.

அதே நேரத்தில் அதிமுகவை போல தங்களது கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை.

சட்டமன்றத்தில் மூன்று தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர்.

அதில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் மிகமிக வரவேற்கக்கூடிய ஒரு தீர்மானம்.

குடியேற்ற தடை சட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இவ்வளவு நாளாக எங்களது கூட்டணி எதை கொள்கையாக பேசியதோ அதை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

நீட் தேர்வுக்கான ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எனவே சட்டமன்றத்தில் வெளிப்படைத் தன்மையோடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார், தெற்கு மாவட்ட பல்லாவரம் நகர தலைவர் தீனதயாளன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், மாநில சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் பிரின்ஸ் தேவசகாயம் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.