April 25, 2024

ரஜினிகாந்த் நம்பிக்கை இழந்தாரா? நம்பியதால் ஏமாற்றமா?

ரஜினியின்அரசியல் சாயம் வெளுத்துவிட்டது!
ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
ரஜினியை நம்பிய அரசியல்வாதிகளுக்கு அல்வா!
ஊடகங்களுக்கு ஆப்பு!

முதலமைச்சர் பதவி வேண்டாம். கட்சித் தலைவர் பதவி வேண்டும். ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்பு. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 சதவிதம் வாய்ப்பு. நான் அரசியல் அரசியல் கட்சி தொடங்கினால் வாய்ப்பு வழங்குவேன் என்கிறார் ரஜினிகாந்த். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்ப இல்லனா? எப்பவும் இல்ல?

இந்த தகவலை ஏழு கோடியே 20 லட்சம் தமிழ்நாட்டு வாக்காளர் மத்தியில் எடுத்து சொல்லுங்கள் என்கிறார் ஊடகவியலாளர்களும், செய்தியாளர்களும், பத்திரிகை செய்தியாளர்களும் இந்த செய்தியை ஒற்றுமையாக இருந்து எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார். மேலும் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பின் அரசியலுக்கு வருவேன் என்று கூறுவது “கடல் வற்றி கருவாடு சாப்பிடுவேன்” என்றதாம் காகம். கடல் வற்றப்போவதும் இல்லை நீ கருவாடு சாப்பிட போவதும் இல்லை என்றாதாம் கொக்கு. இந்த கதை போல் ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை பேட்டி தெளிவு படுத்துகிறது.

ஆட்சிக்கு வந்தப் பிறகு கட்சியின் தலையிடு இருக்கக் கூடாது. வாக்களிக்க மட்டும் தொண்டர்கள் தங்கள் கடமையை செய்யவேண்டும். ஆட்சிக்கு வந்தப் பிறகு தனிக் குழு அமைத்து அந்த குழு திட்டம் தயாரித்து அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் வழங்குமாம். இந்த செயல் துக்ளக் தர்பார் போல் உள்ளது. அதுமட்டும் அல்ல அரசாங்கத்தின் திட்டக்குழு ஒன்று செயல்பட்டு கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு எடுத்து ஆலோசகர்களால் எடுத்து சொல்லப்பட வில்லையா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டும் அல்ல தலைவர்களுக்காகவும் தொண்டர்கள் தேவைப் படுகிறார்கள். தொண்டர்களுக்காக தலைவர்கள் இல்லை என்ற வசனம் ரஜினியின் அதிகாலை எல்லையை வெளிப்படுத்துகிறது.

நான் முதல்வர் ஆகமாட்டேன். முதல்வர் பதவிக்கு ஒருவரையும், கட்சிக்கு ஒரு தலைவரையும் நியமிப்பேன். அதிகார வர்க்கத்தில் உள்ள நீதியரசர், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவேன். மேலும் ஊழல் குற்றச்சாட்டு ஆளாகாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார். அப்படியானால் இவர் அரசியல் இயக்கம் தொடங்க போவதில்லை என்பது மறைமுகமாக தெரிகிறது. நான் படிக்கமாட்டேன். ஆனால் கல்லூரிக்கு செல்வேன் என்று பைத்தியக்காரன் கூறினானாம். அதை எடுத்துக் கூறிய கல்லூரி போராசிரியர் மோசமானவன் என்று மாணவன் கூறியது போல் இருக்கிறது ரஜினிகாந்த் கூறுவது.

அதிமுக, திமுக இருகட்சிகளின் ஆட்சி வரக் கூடாதாம். ஆட்சிக்கு வரும் என்று தெரிந்தால் தான் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாராம். தமிழ்நாட்டு மக்கள் என்ன இளிச்சவாயர்களா? பதவி ஆசை இல்லாத ஒருவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். பதவியை விரும்பாத ஒருவர் ஏன் கட்சி தொடங்க வேண்டும். கேட்டால் சிஸ்டம் சரியில்லை, அதை சரிசெய்ய போகிறேன் என்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுப்போன சிஸ்டத்தை சூப்பராக சரிசெய்து விட்டாரே என்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். அதே போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அருமையாக கட்சியை வழிநடத்தி செல்கிறார் என்கிறார்கள் திமுகவினர். நிலமை இப்படி இருக்கும் பொழுது வெற்றிடம் இல்லாத ஊரில் வெற்றிடம் இருப்பதாக கூறி ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்யவேண்டிய அவசியம் என்ன?- என்ற கேள்விக்கு அவர் செய்தியாளர்களுக்கு வாய்ப்பே தரவில்லை.

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூற்றுப்படி பார்த்தால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அச்சப்படுகிறார் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. முதல்வர் 1996-ல் முதல்வர் நாற்காலி தன்னை தேடி வந்ததாகவும், அதை ஏற்க தான் மறுத்துவிட்டதாகவும் கூறும் ரஜினி தெளிவாக கூறுவதற்கு தயக்கம் ஏன்? திமுக-அதிமுக என்ற இருபெரும் கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது நான் ஏன் கட்சி தொடங்க வேண்டும் என்று கூறவேண்டியது தானே? இளைஞர்கள் மத்தியில் எழுச்சி உருவாக்க வேண்டுமா? அந்த எழுச்சியின் வேகம் இவர் காதுக்கு வரவேண்டுமா. பிறகு இவர் கட்சி தொடங்குவாராம், பிறகு அரசியலுக்கு வருவாராம். முதலமைச்சர் பதவி வேண்டாமா? இது ஒரு ஏமாற்ற வேளையாகவே என்பது சிறு குழந்தைகளுக்கும் கூட தெரியும். மொழியால், இனத்தால் ஒன்றுப்பட்டு நிற்கும் தமிழகத்தில் பதவி வேண்டாம் என்று ஒரு மனிதர் எப்படி வெற்றி பெறமுடியும்? அரசியலில் ஆசை இல்லாத மனிதன் பதவியை விரும்பாத மனிதன் கனவிலும் முதல்வர் பதவி நினைத்துப் பார்க்காத மனிதர், ஏன் அரசியல் இயக்கம் தொடங்க வேண்டும். இதைத் தானே பல்வேறு இயக்கங்கள் கேள்வியாக எழுப்பும். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கோஷத்திற்கு எதிர் கோஷம் எழுப்பியவர்கள், ரஜினியின் விளக்கத்திற்கு எத்தகைய கோஷத்தை எழுப்புவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நேற்று ரஜினிக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இனிமேல் ரஜினி ரசிகர்களுக்கு தான் ஏமாற்றம்?

சினிமா வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு ஆசையிருந்தால் அரசியலில் ரஜினிகாந்த் அடியெடுத்து வைக்கட்டும். அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் குழப்பமான ஆலோசனை வழங்காமல் தெளிவான ஆலோசனையை வழங்கட்டும். ‘விட்டதடி ஆசை வெளாம்பழத்தின் ஓட்டோடு’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் ரஜினிகாந்த். நேற்று வரை ரஜினிக்கு ஆலோசனை வழங்கியவர்கள் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவான விளக்கத்தை தரவேண்டும். ஒரு குழப்பவாதி வார்த்தையை நம்பி தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் வாக்களித்து ஏமாற மாட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்லவராகவே இருக்கட்டும். நாடு நல்லா இருக்கும்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு தனது கட்சி தொடங்கும் நிலைக் குறித்து கருத்துக்களை வெளியிடுவார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள் மாவட்ட செயலாளர்கள். இந்த சூழ்நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்திய சூப்பர் ஸ்டார் ஏன் ஏமாற்றத்திற்கு உள்ளக்காகப்பட்டார் என்பதை பார்க்கும்போது தான் நம்பியவர்களால் இந்த ஏமாற்றம் ஏற்பட்டதா தன்னை நம்பியவர்களால் இந்த ஏமாற்றம் ஏற்பட்டதா? என்பதை பார்க்கும் பொழுது ஒருவிதமான குழப்பத்தில் அல்லது தடுமாற்றத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக தெரிகிறது. சும்மா கிடைத்த சங்கை ஊதி கெடுத்ததுப் போல் தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்று போயஸ் தோட்டத்தில் அமைதியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அரசியல் களத்தில் இழுத்துவிட்டு ஆலோபலம் பாடிவிட்டது ஊடகங்கள், செய்தித்தாள்கள் என்பதை நினைத்து ஒருவேளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் உடைந்து தான் ஏமாற்றம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா? என்ற கேள்வி எழுகிறது. ஒருபக்கம் தனது சகோதரர் சத்தியநாராயணன் மூலம் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற நிலையை வெளிப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.

அதே போல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி நதான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் நம்ப வைக்கிறார். ஆனால் சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்குப் பிறகு தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். ஆக அரசியலா? சினிமாவா? அமைதியான வாழ்க்கையா? அல்லது ஆன்மீக பயணமா? இவைகளை தாண்டி ஆன்மீக அரசியலா? என்ற குழப்பமான சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கருணைப் பார்வையும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவரின் ஆலோசனையும், தற்போது உள்ள நிலையில் ரஜினிகாந்த்துக்கு தேவையில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டாரா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் தமிழ்நாட்டு மக்கள் வந்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆக கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நிலைமை ஆகிவிட்டது என்பதைதான் தனக்கு ஏமாற்றம் என்பதை வார்த்தையால் வெளிப்படுத்தி விட்டார்.