April 26, 2024

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

திண்டுக்கல்: தென் மாநிலங்களில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து, அங்கிருந்து கார் மூலம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரின் கதவை திறந்து நின்றபடி, தொண்டர்களை பார்த்து கையசைத்துக்கொண்டே பிரதமர் மோடி பயணித்தார்.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை பல்கலைக்கழக நிர்வாகிகள் சிறப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.