May 18, 2024

களத்தில் விஜய்!
காலத்தின் கட்டாயம்!
மக்களின் நிலையை மாற்றுவது எப்படி?

ஊழலற்ற நிர்வாகம்! அச்சமற்ற வாழ்க்கை மக்களுக்கு! இதற்கு உத்தரவாதம் வழங்குவது யார்? தனித்து நின்று வென்று காட்ட இயலுமா? கூட்டணி என்பது குழிபறிக்கும் கொள்கை இதற்கு முடிவுரை எழுதுவது எப்பொழுது? தனி தனி கட்சிகள் ஒவ்வொரு கொள்கை! தேர்தல் வந்துவிட்டால் கூட்டணி தர்மம், மக்கள் வாக்குகளை கொள்ளையடிப்பது என்பதே தேர்தல் தர்மம்.

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாற்றம் புதிய உடன்பாடு. இரண்டு கட்சி மட்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் இரு கைகளில் இதற்கு முற்றுப்புள்ளி எப்பொழுது. புதியவர்கள் வருகையை ஆரம்பகட்டத்திலேயே தடுத்து ஒழிப்பது அல்லது பலகீனப்படுத்தி மக்கள் மத்தியில் ஆதரவு நிலையை தடுத்து நிறுத்துவது!

இதையும் தாண்டி ஒருவன் துணிந்து அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த், டி.ராஜேந்தர், ராமராஜன், பாக்கியராஜ் போன்றவர்கள் நிலையே நினைவுக்கு வந்து போகும். ரசிகர் மன்றங்கள் கூட்டம் கூடுவதும் கோஷம் போடுவதும் பிறகு கலைந்து செல்வதும் இயற்கை!

ஆனால் அத்தனை வாக்குகளாக மாற்றுவது செயற்கையும், இயற்கையும் இணைந்து செயல்படும் ஒருவிதமான கலவை. அரசியல் கற்றவன் சுலபமாக இரண்டையும், கையாள்வான். ரசிகர் மன்றம் வைத்தவன் மூன்று மணி நேரத்தில் மறந்துவிடுவான். பின்பு அரசியல்வாதியின் பொய் பரப்புரைக்கு அடிமையாகி தோள் மீது கைபோட்டு மதுக்கூடம் போவான். எதிர்த்து போட்டியிட்டவன் ஏமாந்து போவான்.

மது, மாது, கொலை, கற்பழிப்பு திருட்டு வழிப்பறி ஆள்கடத்தல் நிலம் அபகரிப்பு, போலி பத்திரம் தயாரிப்பு, கஞ்சா விற்பது கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் கைவந்த கலைகள். மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை சட்டவிரோத செயல்கள் ஈடுபடுவதும் அதன் மூலம் வருவாய் ஈட்டுவதும் அன்றாடம் நடைபெற்று வரும் வழக்கமான ஒன்று. இவற்றை புதியவர்கள் சகித்துக் கொள்ள முடியுமா?

ஆனால் இவற்றை எல்லாம் செய்பவன் அரசியல் கட்சி. அரசியல் கட்சி தலைவன் வட்டம் முதல் மாவட்டம் வரையில் ஆதரவு பெற்றே இவைகள் நடந்துக் கொண்டே இருக்கும். இதற்கென்று காவல்துறையும் கையூட்டு கொடுத்து பாதுகாப்பும் வாங்கும். சட்டம் போட்டு தடுத்தாலும் சட்டத்தின் வழியில் நடந்ததாலும் பணக்காரர்கள் பார்வை பட்டால் பலருக்கு பணி இடம் மாற்றம் வரும். பிறகு காத்திருப்பு பட்டியலில் பெயர் இடம் பெறும். கருப்பு ஆடுகள், சிவப்பு ஆடுகள் என்று வலம் வரும் வாலாட்டும்.

மொத்தத்தில் மக்கள் வாழ்க்கை அச்சத்துடன் பயத்துடன் அன்றாடம் நடந்துக் கொண்டு போகும். பசி, பட்டினி வறுகைக் கோடு, சாதி சண்டை, தீண்டாமை, வன்கொடுமை, இரட்டைக் கொலை, இரட்டைக் குவளை முறை ஆலய வழிபாட்டுக்கு தடை வரும் பிறகு ஆலயத்திற்கு அரசு பூட்டு போடும். மக்கள் போராட்டம் அரசு மவுனம் காக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு அரசியலுக்கு எவர் வருவார்? ஒரு கூட்டம் அரசியலுக்கு அப்பார்பட்டு இயங்கும். விஜய் விதிவிலக்கல்ல! வா மகனே! வந்துபார்! உண்மை தெரியும் உலகம் புரியும்! நன்மை எது! தீமை எது தானாக விளங்கும்!

– டெல்லிகுருஜி