April 26, 2024

கமலஹாசன் தலைமையில் மூன்றாவது அணி

60 வருடம் சினிமா நடிப்பை விட்டு விலகி அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கமலஹாசன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார். சுமார் 15 லட்சம் வாக்கு என்பது சாதாரண வாக்கு எண்ணிக்கை அல்ல! இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் களம் என்பது எந்த அளவு வெற்றியை தரும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ரசிகர் மன்றம் என்பது எம்.ஜி.ஆர், விஜயகாந்த் இருவரைத் தவிர கட்சி தொடங்கிய மற்ற நடிகர்களுக்கு எந்தவித பலனையும் தமிழக அரசியல் களம் தரவில்லை! ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதால் கமல் அவர்களுக்கு தமிழக தேர்தல் களம் ஓரளவுக்கு நம்பிக்கை தருவதாகவே அமைந்துள்ளது.

திராவிடக் கொள்கையின் ஆதிக்கம், திமுக, அதிமுக இருகட்சிகள் ஆக்கிரமிப்பு இவைகளை கடந்து தேசிய கட்சிகளின் வருகை அவர்கள் எதிர்பார்ப்பு, அவர்களின் வாக்கு வங்கி போன்றவைகள் கமல் கட்சியான மக்கள் நீதிமய்யம் 2021 சட்டமன்ற தேர்தலில் எந்த அளவு வெற்றியை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் கட்சியினர் மத்தியிலும் தமிழக வாக்காளர் மத்தியிலும் மிக பெரிய எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.

கமல் அரசியல் பிரவேசம் என்பது திமுகவுக்கு சரிவை ஏற்படுத்தலாம். அதிமுக வாக்குகளையும் பிரிக்கலாம் அல்லது அதிமுக குறைந்த அளவு வெற்றி வாய்ப்பை பெறுவதற்கும் உதவி செய்யலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சட்டமன்ற தேர்தலில் கணக்கு போட்டு பார்த்தால், சுமார் 30 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை உறுதிப்படுத்தும் என்றாலும் தனித்து போட்டியிடுவதும் தன்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்டு கூட்டணி அமைத்து போட்டியிடும் போது கடந்த கால நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் கூடலாம் அல்லது சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் கூடலாம், அல்லது குறையலாம். இது “மக்கள் நீதி மய்யம்“ கட்சி மக்கள் முன்வைக்கின்ற கோரிக்கையையும், வாக்குறுதியையும் பொறுத்து அமையும்.

அதே நேரம் கமலஹாசன் கட்சியால் திராவிட கட்சிகள் வெற்றி வாய்ப்பில் ஒரு சில இடங்களில் சரிவை சந்திக்கும் என்பது உறுதி! 2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் கட்சி தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்ட போது அதிமுக வெற்றியை மிகப் பெரிய அளவில் தோல்வியில் தள்ளியது குறிப்பிடத்தக்கது. சுமாராக அறுபது தொகுதிகள் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தோற்று போவதற்கு தேமுதிக காரணமாக அமைந்துவிட்டது.

விஜயகாந்த் 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி அமைத்து திமுக, அதிமுகவை எதிர்த்து மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட போது ஒரு இடம் கூட வெற்றிப்பெற முடியவில்லை. தேமுதிக மட்டும் அல்ல, அதன் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட், சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், வைகோ மதிமுக உள்பட ஒரு கட்சிகள் கூட ஒரு இடத்தில் வெற்றிப்பெற இயலாமல் படுதோல்வியை சந்தித்தது என்பது கடந்த கால வரலாறு இந்த சூழ்நிலை கமலஹாசன் “மக்கள் நீதிமய்யம்“ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை மூன்றாவது அணி பக்கம் மக்கள் ஆதரவு அணி திரண்டால் ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்பை பெறலாம். கழகங்களுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பு புதிய வாக்காளர்களையும், கவரலாம். தேமுதிக பலகீனமாக இருப்பதால் கமல் கட்சிக்கு பலமான வாய்ப்பு உருவாகலாம். 2021 சட்டமன்ற தேர்தலில் காத்திருப்போம். இன்னும் சில மாதங்கள்.

– டெல்லிகுருஜி