May 18, 2024

அண்ணாமலை உருண்டு புரண்டாலும் பா.ஜனதாவை மக்கள் ஏற்க மாட்டார்கள்- கே.எஸ்.அழகிரி கணிப்பு

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த யாத்திரை செல்வதாக கூறியிருக்கிறார். அவர்களது யாத்திரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பாரதிய ஜனதா கையில் வைத்திருப்பது மக்களுக்கு விரோதமான கொள்கைகள். அதை மக்கள் எப்படி ஏற்பார்கள்? அதுமட்டுமல்ல 9 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்தது என்ன? பெரிய அளவிலான சாலை வசதிகளோ, புதிய ரெயில்வே திட்டங்களோ, துறைமுகங்களோ என்று எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஒரு எய்ம்ஸ் கல்லூரியை அறிவித்தார்கள். அதையும் இது வரை கட்டவில்லை.

காமராஜர் தலைமையிலான அமைச்சரவை 9 ஆண்டுகளில் பெல் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, பவானி அணை என்று பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால் பா.ஜனதா அந்த மாதிரி ஏதாவது ஒரு திட்டமாவது கொண்டு வந்திருக்கிறதா? அப்படி இருக்கும்போது எந்த முகத்தோடு மக்களை சந்திக்க போகிறார்கள்? அண்ணாமலை மாநிலம் முழுவதும் உருண்டு, புரண்டாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள். முதலில் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும். அப்படியானால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்காளர்களை சந்திக்க திட்டமிட்டால் மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.