April 25, 2024

தமிழகத்தில் 8 மையங்களில் இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கான எழுத்துத்தேர்வு


சேலம்:

இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்கு சொந்தமானது. இது இந்திய அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளையும் இயக்கி வருகிறது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டார கிளைகள் உள்ளன.

பொதுமக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 950 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு என இரு கட்டங்களை கொண்டதாக இருக்கும். முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன் பிறகு நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.

முதல் நிலை எழுத்துத் தேர்வுக்கான மையம் தமிழ்நாட்டில் சென்னை, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உத்தேசமாக எழுத்துத்தேர்வு வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.