April 26, 2024

சின்ன ஆசை பெரிய நஷ்டம்! பதவிக்காக பழனியப்பன் புலம்பல்!

அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அமமுக கழகத்தில் முக்கிய பதவியில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை சார்ந்தவருமான பழனியப்பன் கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடிகளை சம்பாதித்தவர். உயர்கல்வி துறையில் துணைவேந்தர் நியமனம் முதல் பேராசியர்கள் நியமனம் வரை கட்டிங் பார்த்தவர். லட்சக்கணக்கான ரூபாயை செலவு செய்து தனது சொந்த தொகுதியான பாப்பிரெட்டிப் பகுதியில் தோல்வியை சந்தித்தவர். தோல்விக்குப் பிறகு அமமுகவில் இருந்து விலகி தற்போதைய திமுக கழகத்தில் உள்ள மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சரின் சிபாரிசின் பேரில் திமுகவில் சேர்ந்தார்.

தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைப்பதற்காக தேதி கேட்டவர் திடீரென ஒருநாள் அறிவாலயத்தில் ஆயிரம் பேர்களை அழைத்துவந்து தனது செல்வாக்கை காட்டி திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பை தட்டிப் பறிக்க முயற்சி செய்தார். தருமபுரி மாவட்ட அமைச்சர் பொறுப்பை வகிக்கும் பொறுப்பு அமைச்சராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டவுடன் தனது உடல்நலத்தையும் பாராமல் தனது நேர்முக உதவியாளரை தருமபுரி மாவட்டத்திற்கு அனுப்பிவைத்து பலமுறை தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அதற்கு தீர்வுகாணும் முகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து நலத்திட்டங்களை வழங்க ஏற்பாடு செய்தார். ஆனால் இந்த முயற்சி ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஏதோ காரணத்தினால் அது தள்ளிப்போனது. நகராட்சி மண்டல தேர்தலில் எப்படியும் வெற்றிப்பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்து வரும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என்று ஏமாந்த நிலையில் இருக்கும் பழனியப்பன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி திமுக சார்பில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தின் பக்கமோ கட்சி மாவட்ட அலுவலகத்தின் பக்கமோ வருவதை தவிர்த்து வருகிறார். இதை புரிந்துக் கொண்ட மாவட்ட செயலாளர் தரங்கம் சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் இருவரும் தங்களுக்குள் இருந்த பிரச்சனைகளை விட்டு விட்டு இருவரும் ஒன்றாக இணைந்து பகையை மறந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வத்தின் ஆலோசனையை கேட்டு கட்சி வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். மாவட்ட செயலாளர் பதவி வழங்கினால் மட்டுமே திமுகவில் என் பயணம் தொடரும் இல்லையென்றால் அமைதியாக இருப்பதை தவிர வேறுவழியில்லை என்கிறார் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன்.

– டெல்லிகுருஜி