April 25, 2024

சட்டரீதியாக போராடுவோம் எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு நடந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் விஜிலென்ஸ் சோதனைக்கு அதிமுக தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை.