“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை வரும் 15 ஆம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசுத் துறை திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவதற்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிதாக குடும்ப அட்டைகள் பெற்றவர்கள், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுடையவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசுத் துறை திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவதற்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை வரும் ஜூலை 15ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் 15.07.2025 அன்று முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/ சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர். மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி. 07.07.2025 முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொ
More Stories
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..!
அரசு வேலைவாய்ப்புகளில் பீஹாரில்
பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு
முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு