June 30, 2025

குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…

அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகும், எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் பலகீனப்படுத்தும் விதமாக பாஜக கட்சி, இந்து முன்னணியும் இணைந்து நடத்திய முருகன் மாநாடு நிகழ்வுகள் அமைந்துள்ளது. மாநாட்டில் அண்ணா, பெரியார் போன்றோர்களை கேலி சித்திரம் மூலம் முருகப்பக்தர்கள் மாநாட்டில் காட்டியதும், அதற்கு விளக்கம் அளித்ததும் அதிமுகவையும் பாஜக கூட்டணியையும் மக்கள் மத்தியில் பலகீனப்படுத்தும் செயலாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்தப் போதிலும் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அதிமுக தொண்டர்கள் அமைதி காப்பார்களா என்பது சந்தேகமே! ஆனால் முருகப்பக்தர்கள் மாநாடு உள்ளப்படியே பாஜக கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது என்பதற்கு அச்சாராகமாக அமைந்துள்ளது மட்டுமல்லாமல் இந்து மக்கள் ஒற்றுமையை ஓரளவிற்கு தென்மாவட்டங்களில் ஒன்று சேர்த்துள்ளது என்றே கூறவேண்டும்.

இதன் மூலம் மதுரைக்கு தெற்கே தனது செல்வாக்கை மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆன்மீகத்தை பயன்படுத்தி பாஜக கட்சி பெரிய அளவில் வாக்குவங்கியை உயர்த்தி உள்ளது. மாநாட்டில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெரியார், அண்ணா பற்றிய கேலி சித்திரங்களுக்கு எந்தவித கருத்துக்களையும் வெளியிடாமல் பொறுத்துக் கொண்டிருந்தது கட்சியின் பெயரையே கேள்விக்கு உட்படுத்தியதுடன் திமுகவிற்கு அரசியல் ரீதியாக முன்னெடுத்து செல்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது முருக பக்தர்கள் மாநாடு இதை வைத்துக் கொண்டு திமுக அதிமுகவினரின் எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஒரு படி மேலே சென்று ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் விவாதங்கள் மூலம் கருத்துக்களை பதிவிட்டு அதிமுகவின் மீது விமர்சனங்கள் மூலம் பலகீனப்படுத்துவதற்கு முயற்சிகள் செய்கின்றன.

இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் பங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அதிமுக பொறுப்பில் உள்ளவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வேலுமணி பங்கேற்று இருப்பது பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஆதரிப்பது போல் அமைந்துள்ளது என்று திமுகவினர் கடும் விமர்சனம் செய்வதற்கும் ஆதாரமாக அமைந்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்ததற்காக முன்னாள் அமைச்சர் தலவாய் சுந்தரம் வகித்த கட்சி பதவியை பரித்தவர் எடப்பாடி பழனிசாமி. அதே போல் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்து இட்டதற்காக முன்னாள் எம்.எல்.ஏ விஜயக்குமாரையும் கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் வேலுமணி விஷயத்தில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதிப்பது அதிமுகவினர் மத்தியில் முணுமுணுப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த பொழுது அண்ணாவையும், புரட்சித் தலைவி அம்மாவையும் அவதூறாக பேசியதை காரணம் காட்டி கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று குரல் எழுப்பிய அதிமுகவினர் இப்பொழுது பாஜக கட்சி பங்கேற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த நிகழ்வு குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் அணி சேருவதற்கு முன்பாக இப்படிப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாக கூட்டணிக்குள் வரவேண்டிய கட்சிகள் அதிமுக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருவார்களா, வரமாட்டார்களா என்ற சந்தேகமும் அதிமுகவினர்கள் மத்தியில் புயலாக உருவெடுத்து உள்ளது. ஒருவேளை பாஜக கட்சி தாங்கள் கூட்டணி அமைப்போம் என்று சில கட்சிகள் முடிவெடுத்து விட்டால் அதிமுக நிலைமை எத்தகைய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும் என்று நினைத்துப் பார்த்தால் அச்சம் அடையாமல் இருக்க முடியவில்லை என்கிறார் கட்சியின் முக்கிய பிரமுகர்.

தற்பொழுது உள்ள நிலவரப்படி இன்னும் பத்து மாதங்களில் நிலைமை தொடர்ந்து சென்றால் பாஜக கூட்டணியால் அதிமுக பலகீனம் அடைவதுடன் கூட்டணியிலும் தொகுதி ஒதுக்கீடிலும் மிகப் பெரிய அளவில் இடைவெளி ஏற்பட்டு கடைசி நேரத்தில் பாஜக அதிமுக கூட்டணி தேர்தலை சந்திப்பதில் பல வழிகளில் சிக்கல்கள் உருவெடுத்து அதனால் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மீண்டும் திமுகவிற்கு சாதகமாக அமையும் என்கின்ற அச்ச உணர்வும் பதை பதைப்பும் அதிமுக கட்சியில் பேசப்பட்டு வரும் செய்தியாகும்.

இத்தகைய நிலையில் இருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும் ஒருங்கிணைப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் எத்தகைய வழிகளை எடப்பாடி பழனிசாமி கையாளப் போகிறார் அதன் மூலம் கூட்டணியை எந்த வகையில் கட்டமைக்கப் போகிறார் என்கின்ற கேள்வி எழத் தொடங்கி உள்ளது.
– டெல்லிகுருஜி