அகமதாபாத்: குஜராத் மாநிலம் விசாண்தர் மற்றும் கடி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் விசாண்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இத்தாலியா வெற்றி பெற்றார். கடி தொகுதியில் பாஜகவின் ராஜேந்திர சாவ்தா வெற்றி பெற்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவராக இருந்த கோபால் இத்தாலியா, ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள விசாண்தர் தொகுதியில் போட்டியாளரான பாஜக வேட்பாளர் கிரீத் படேலை 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, கோபால் இத்தாலியா 75,942 வாக்குகளும், கிரீத் படேல் 58,388 வாக்குகளும் பெற்றனர். 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
முன்னதாக, விசாண்தரில் கடந்த 18 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத நிலையில், இந்த முறை வெற்றி பெற்று அந்த தடையை உடைக்க முடியும் என பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. பாஜக வலுவாக உள்ள குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் ஆம் ஆத்மி வென்றது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
குஜராத்தில் உள்ள கடி தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டது. இங்கு பாஜகவின் ராஜேந்திர சாவ்தா, காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சாவ்தாவை 39,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ராஜேந்திர சாவ்தா 99,742 வாக்குகளும், ரமேஷ் சாவ்தா 60,290 வாக்குகளும் பெற்றனர். இங்கு 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
முன்னதாக ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் கடி தொகுதியில் 57.90 சதவீத வாக்குகளும், விசாண்தர் தொகுதியில் 56.89 சதவீத வாக்குகளும் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணியளவில் முடிவடைந்தது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பூபேந்திர பியானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் பாஜகவில் இணைந்ததால் விசாண்தர் தொகுதி காலியானது. இப்போது அங்கே நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ளது. இங்கே காங்கிரஸ் கட்சி சார்பில் நிதின் ரன்பாரியா போட்டியிட்டார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹர்ஷத் ரிபாடியாவை ஆம் ஆத்மியின் பூபேந்திர பியானி 7,063 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு விசாண்தர் தொகுதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் பிப்ரவரி 4ஆம் தேதி பாஜக எம்.எல்.ஏ. கர்சன் சோலங்கி மறைந்ததால் கடி தொகுதி காலியானது. இந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ராஜேந்திர சாவ்தா போட்டியிட்டார். ஆம் ஆத்மி சார்பில் ஜகதீஷ் சாவ்தா களமிறக்கப்பட்டார். இந்த இடைத்தேர்தல் முடிவுகளின்படி, 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜக 162 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும், ஆம் ஆத்மி 5 இடங்களையும் பெற்றுள்ளன. சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்தையும், சுயேட்சைகள் இரண்டு இடங்களையும் பெற்றுள்ளனர்.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி