June 30, 2025

இந்தி எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல… அமித் ஷா பேச்சு

இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழியாக ஹிந்தி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.டெல்லி ஆட்சி மொழித் துறையில் நடைபெற்ற பொன் விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் விழா மேடையில் பேசிய அவர், பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக அமைச்சர் அமித் ஷா மேலும் பேசியதாவது: நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. வெளிநாட்டு மொழிகளையும் (ஆங்கிலம், பிரான்ஸ், ஸ்பானீஷ்) நான் எதிர்க்கவில்லை. அதே சமயம் நமது நாட்டு மொழிகளை நாம் பெருமைப்படுத்த வேண்டும். பிராந்திய மொழிகளை கௌரவிக்க வேண்டும். நமது நாட்டின் பிராந்திய மொழிகளில் பேசுவதற்கு நாம் கூச்சப்படக் கூடாது. நமது தாய் மொழியிலேயே நாம் சிந்திக்கிறோம்.

ஆகையால் அடிமை மனப்பான்மையிலிருந்து நாம் அனைவரும் வெளிவர வேண்டும். நமது தாய் மொழி குறித்து நாம் பெருமிதம் கொள்ளாத வரையில் தெளிவாக சிந்திக்க முடியாது. அடிமை மனோபாவத்தில் இருந்தும் நம்மால் வெளியே வர முடியாது. ஆகையால் தாய்மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது கட்டாயம்.

நமது நாட்டை பொருத்தமட்டில் மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதன மட்டுமல்ல. நமது நாட்டின் ஆன்மாவாக மொழி திகழ்கிறது. ஆகையால் பாரம்பரியமிக்க நமது மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது நமது கடமை. இதனால் தான் அனைவரும் தாய் மொழியிலேயே உரையாட வேண்டும் என கூறுகிறேன்.

இதைத் தான் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். வரும் நாட்களில் நமது தாய் மொழியிலேயே பிறருடன் கலந்துரையாட வேண்டும். குறிப்பாக நாட்டின் அதிகாரப்பூவ மொழிகளில் நாம் கலந்துரையாட வேண்டும். இந்தி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரான மொழி அல்ல என்பதை எனது இதயத்தில் இருந்து நான் நம்புகிறேன். ஒட்டு மொத்த இந்திய மொழிகளுக்கும் இந்தி அனைத்து மொழிகளுக்கும் தோழமை கொண்ட மொழி. இந்தியும் நமது இந்திய மொழிகளும் தான் நமது கலாசார பெருமைகளை உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

முன்பெல்லாம் ஜெஇஇ, நீட், க்யூட் போன்ற நுழைவுத்தேர்வுகளை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். தற்போது 13 மொழிகளில் அந்தத் தேர்வுகளை எழுதுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. முன்பு சிஏபிஎஃப் தேர்வுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே தேர்வு எழுத முடியும். ஆனால் மத்திய அரசு இதனை நெகிழ்வுத் தன்மையுடன் மாற்றி 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுத வழிவகை செய்திருக்கிறது. அந்த வகையில் 95 சதவீத விண்ணப்பதாரர்கள் தங்களது தாய் மொழியில் தான் மேற்கண்ட தேர்வுகளை எழுதுகின்றனர். இதன் மூலம் இந்திய மொழிகளில் பிரகாசமான எதிர்காலத்தை நாம் உணர முடியும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.