April 24, 2024

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழே நவீன வசதிகளுடன் பூங்கா-உணவு விடுதிகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் கடைகளையும் பார்வையிட்டார்.

சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை, கோயம்பேடு சாலையை இணைக்கும் வகையில் 2008-ம் ஆண்டு ரூ.260 கோடியில் கட்டப்பட்ட நவீன மேம்பாலம் ஆகும். இதன் அருகில்தான் ஆலந்தூர் ரெயில் நிலையம் உள்ளது.

கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 5.38 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு காலி இடம் இருந்தது. இந்த இடத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் ரூ.14.40 கோடியில் நவீனப்படுத்தி பூங்கா மற்றும் உணவுக் கூடங்கள், கடைகள் அமைத்து பொதுமக்கள் வந்து சென்று பொழுது போக்கும் வகையில் அமைத்து உள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு ‘மைல்கல்’ என்பதை பறைசாற்றும் வகையில் இது மக்கள் பயன்படுத்தும் வகையில் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் கடைகளையும் அவர் பார்வையிட்டார்.

சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சறுக்கு விளையாட்டு பகுதிகளையும் பார்வையிட்டார். நடைபயிற்சிக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள அழகிய பிளாட்பாரத்தையும், புல் தரைகளையும் கண்டு களித்தார்.

அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உடன் வந்திருந்தனர்.

கத்திப்பாரா சதுக்கத்தில் ஒரே நேரத்தில் 25 பஸ்களை நிறுத்தும் அளவுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தில் 3 கி.மீ நீளத்துக்கு 6 அடி அகலத்தில் நடைபயிற்சி பாதை, அமைக்கப்பட்டுள்ளதுடன் அ, ஆ, இ, ஈ உள்ளிட்ட உயிர் எழுத்துக்களும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

புல் தரையை சுற்றி சிமெண்ட் இருக்கைகள், அலங்கார விளக்குகள், மேல்பால தூண்களில் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உணவு வசதிகளுடன் 56 கடைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் சாப்பிட வசதியாக திறந்த வெளி இருக்கை வசதியும் உள்ளது.

சதுக்கத்தின் மைய பகுதியில் 3000 அடி நீளத்தில் மருதாணி செடி, வளர்க்கப்பட்டு உள்ளதுடன் சதுக்கம் முழுவதும் 27 வகையான 7,069 செடிகள் நடப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.