January 23, 2025

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்

பீஜிங் : சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய சீனாவில் உள்ள செங்சாவு மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஐபோன் தொழிற்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.